தொழில்நுட்ப உலகில் மார்க் ஷூக்கர் பேர்க்கை அறியாதவர் இல்லையெனலாம்.
உலகில் மிகப் பிரபலமானதும் அதிக பாவனையாளர்களைக் கொண்ட சமூக வலையமைப்பின் ஸ்தாபகரே ஷூக்கர் பேர்க்.
உலகின் இளம் கோடிஸ்வரர்களில் ஒருவராக அறியப்பட்ட இவர் தொழில்நுட்பத்துறையில் உள்ள முதல் 10 மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவராகவும் திகழ்ந்தார்.

ஆனால் தற்போது தொழில்நுட்பத்துறையில் உள்ள முதல் 10 பணக்காரர்கள் பட்டியலில் இருந்து முதன்முறையாக வெளியேறியுள்ளார்.
இதற்கான காரணம் பங்குச் சந்தையில் பேஸ்புக் பங்குகளின் விலை தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருகின்றமையாகும்.
பேஸ்புக் கடந்த மே மாதம் தனது ஆரம்பப் பொது வழங்கலை ஆரம்பித்தது.
நஸ்டக் பங்குச்சந்தை (Nasdaq stock market) மூலமாக பேஸ்புக் தனது பங்கு விற்பனையை ஆரம்பித்தது.
பேஸ்புக்கின் பங்குச்சந்தைப் பிரவேசமானது உலக அளவில் பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தது.
ஆரம்பத்தில் நன்றாகப் போய்க்கொண்டிருந்த பேஸ்புக்கின் பங்கு வியாபாரம் பல காரணங்களுக்காகத் தொடர்ச்சியாகச் சரியத் தொடங்கியது.

இதனையடுத்து அதன் ஸ்தாபகரும் பேஸ்புக்கின் அதிக பங்குகளைக் கொண்டுள்ளவருமான ஷூக்கர் பேர்க்கின் சொத்து மதிப்பும் சரியத் தொடங்கியது.
இந்நிலையில் தற்போது பேஸ்புக் பங்கொன்றின் விலை 20.4 அமெரிக்க டொலர்களாகும்.
ஆரம்பப் பொது வழங்கல் விலையான 38 அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடும் போது 47 % வீழ்ச்சியைக் காட்டுகின்றது.
இதன்மூலம் அவரின் சொத்துமதிப்பு 423 மில்லியன் அமெரிக்க டொலர்களால் குறைந்துள்ளது.
இதனால் தொழில்நுட்பத்துறையில் உள்ள முதல் 10 மிகப்பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இருந்து ஷூக்கர் பேர்க் வெளியேறியுள்ளார்.
இப்பட்டியலில் முதலிடத்தில் பில்கேட்ஸ் உள்ளார். அவரின் சொத்து மதிப்பு 62 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.